1999-ல் உலகக்கோப்பையின் விளம்பரப்பாடல் வெளியாகும் முன்பே நாங்கள் உலகக்கோப்பையை விட்டு வெளியேறி விட்டோம்’’ என்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸிர் ஹூசைன். இந்த உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து அவ்வளவு வேகமாகத்தான் வெளியேறியிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், விளம்பரப்பாடல் மட்டும் முன்கூட்டியே வெளியாகிவிட்டது. இங்கிலாந்துடன் போட்டி போட்டுக்கொண்டு பாகிஸ்தான் ஒரு பக்கம் சரிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தங்களின் பழைய பாய்ச்சலுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு போட்டியை வென்றுவிட்டார்கள் என நம்பப்பட்ட ஆப்கானிஸ்தானும் நெதர்லாந்தும் அந்த துச்சமான கணிப்பைப் பொய்யாக்கியுள்ளன. அத்தனை பேர் மனதிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி, அரையிறுதிக்குச் செல்லப்போகும் அந்த நான்கு அணிகள் எவை? குறிப்பாக அந்த நான்காவது இடத்தைப் பிடிக்கப்போகிற அணி எது என்பதே.
இந்திய அணி இந்த வேகத்தில் இறங்கி அடிக்கும் என்பதைப் பெரிதாக யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. முதல் ஐந்து போட்டிகளிலுமே சேஸிங்தான் செய்திருந்தார்கள். அதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும்தான் இந்திய அணி கொஞ்சம் தடுமாறி வென்றிருந்தது. மற்ற போட்டிகளிலெல்லாம் ரொம்பவே சௌகரியமாக எதிரணிகளை வீழ்த்தியது. ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் என இந்தியாவின் மும்மூர்த்திகளும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் பும்ரா, ஷமி இருவருமே எதிரணிகளை மொத்தமாக சாய்க்கும் அளவுக்கு வேகம் கூட்டி மிரட்டுகின்றனர். குல்தீப் யாதவ் பந்தைத் திருப்பும் சாமர்த்தியத்தில் ஒரு புயலை எதிர்கொள்ளும் மிரட்சியை அடைகின்றனர் எதிரணி பேட்டர்கள். இதுவரை 6 போட்டிகளில் பந்து வீசியிருக்கும் இந்திய பௌலர்கள் எதிரணியின் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். 90%க்கும் அதிகமான வெற்றி விகிதம் இது.
சேஸிங்கில் சௌகரியமாக ஆடிவந்த இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முதல் சவாலாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்ய
க் கிடைத்த அந்த வாய்ப்பில் இந்திய அணி தடுமாறியிருந்தாலும், ரோகித்தின் ஆகச்சிறந்த பேட்டிங்கால் இந்திய அணி நிமிர்ந்து நின்றது. டார்கெட்டைத் தற்காக்க வேண்டும். அதுவும் வெறும் 230 ரன்கள் என்கிற எளிய இலக்கு. நடப்பு உலகக்கோப்பையில் இந்திய பௌலர்கள் இதற்கு முன்னர் சந்திக்காத சவால் அது. ஆனால் அதிலும் திறம்படச் செயல்பட்டு இந்திய அணியை கம்பீர நடைபோட வைத்தனர். ஆடியிருக்கும் 6 போட்டிகளிலும் இந்திய அணி வென்றிருக்கிறது. அரையிறுதியில் ஒரு இடத்தைத் தங்களுக்கென எடுத்துக் கொள்வதற்கு இதுவே போதுமானதுதான். கடந்த உலகக்கோப்பைகளிலுமே இதேபோன்று பெரும்பாலும் போட்டிகளில் தோற்காமல் நாக் அவுட் வரை இந்திய அணி சென்றிருக்கிறது. ஆனால், நாக் அவுட்டில் கடுமையாகத் திணறியிருக்கிறது. அப்படியொரு சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதே ரசிகர்களின் மனதை உறுத்தும் விஷயமாக இருக்கிறது.

இந்திய அணிக்கு சேஸிங் சௌகரியமென்றால் தென்னாப்பிரிக்க அணிக்கு முதல் பேட்டிங் செய்வது செளகர்யம். முதலில் பேட்டிங் செய்த அத்தனை போட்டிகளிலும் சௌகர்யமாக வென்றிருக்கிறார்கள். சேஸிங் செய்கையில்தான் நெதர்லாந்திடம் தடுமாறி, பெரும் அப்செட்டை சந்தித்திருந்தார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக சேப்பாக்கத்திலும் சேஸிங்கின்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி என்ன மாதிரி ஆடும் என எதிர்பார்த்தோமோ, அந்த ஆட்டத்தைத் தென்னாப்பிரிக்க அணி ஆடிக் கொண்டிருக்கிறது. டீகாக், மார்க்ரம், ஹென்றிக் க்ளாசென் என ஒரு அதிரடி பட்டாளம் சிக்சர்களைப் பறக்கவிடும் அதேவேளையில் சீராகவும் ஆடிக்கொண்டிருக்கிறது. ஷம்சி, மகாராஜா, கொட்சீ, யான்சென், இங்கிடி என பௌலர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடிவருகின்றனர். இப்போதைய நிலைமைக்கு 6 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை அடுத்த 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள வேண்டும். இந்த மூன்றில் குறைந்தபட்சமாக ஒன்று அல்லது இரண்டு போட்டிகளை வெல்லும்பட்சத்தில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிடும். எப்படியாவது அரையிறுதிக்குள் தென்னாப்பிரிக்கா நுழைந்துவிடும் என்பதையே அவர்கள் இதுவரை ஆடியிருக்கும் ஆட்டங்கள் உணர்த்துகின்றன.
ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் 6 போட்டிகளில் ஆடி நான்கில் வென்று ஒரே நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளுமேகூட 2 போட்டிகளை வென்றே ஆக வேண்டிய சூழல் ஏற்படலாம். மெதுவாகத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இப்போது புயல் வேகத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறது. வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த நியூசிலாந்து அணி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் தோற்றிருக்கிறது. அவர்களுக்கு அடுத்து வரும் 3 போட்டிகளுமே முக்கியம். நியூசிலாந்தை ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவிற்குக் குறைவான சவால்தான். இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளையே அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த மூன்றில் இரண்டு அணிகள் ஃபார்மிலேயே இல்லை. ஆக, ஆஸ்திரேலியா மீண்டும் உலகக்கோப்பையில் தங்களின் ஆதிக்கத்தை வெளிக்காட்டும் நேரம் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட இந்த நான்கு அணிகளுக்குத்தான் அரையிறுதிக்குச் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளும் இன்னமும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. இறுதிக்கட்டத்தில் நடைபெறும் லீக் போட்டிகளின் முடிவைப் பொறுத்து இவற்றுள் ஒரு அணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது. நியூசிலாந்து அணிதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இப்போதைக்கு வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்குத்தான் அரையிறுதிக்கான அறிகுறியே தெரியவில்லை. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கே தகுதிபெறுமா எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானைத் தவிர்த்து முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணியும் பாகிஸ்தானும் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபியில் ஆட முடியும். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ‘எங்களிடம் என்ன இல்லை... எங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது' என ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் புலம்புகிறார். இதற்கான விடையை பட்லர் தங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில்தான் தேட வேண்டும். ஓர் அணியாக அல்லாமல் துண்டு துண்டாகத்தான் இங்கிலாந்து செயல்படுகிறது. கூட்டு முயற்சியும் ஒருமித்த திட்டமிடலும் இல்லாததுதான் மிகப்பெரிய பிரச்னை. இப்போதைக்கு இங்கிலாந்தின் இலக்கு அந்த 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதிபெறுவதுதான். அதாவது அவர்களின் எண்ணப்படி நடக்க வேண்டும்.
Comments 0